Monday, August 31, 2015

எலிஸாஃபே -இந்திய பயணக் கடிதங்கள்.



              நூல் 
             அறிமுகம்:  சேகு.
எலிஸாஃபே -இந்திய பயணக் கடிதங்கள்.
தமிழில் :அக்களூர் ரவி.சந்தியா பதிப்பகம், பக்கங்கள் -286.விலை ரு:200
        எலிஸாஃபே இங்கிலாந்தை சேர்ந்த 24 வயது பெண். தனது 
கணவரான  அந்தோனிஃபேவுடன் இந்திய பயணத்தை 1779ல் இங்கிலாந்திலிருந்து 
தொடங்கினார். இப்பயணத்தின் நோக்கம் ஃபே, கல்கத்தாவிலுள்ள 
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து தொழில் நடத்துவதற்காகவே 
இந்தியாவில் பாரிஸ்டர்ரான  தனது கணவர் வளமான தொழில் செய்வார்,
என்ற இந்தியாவில் சம்பாதிக்கபோக நிறைந்த செல்வங்களை, கற்பனை
செய்தவாறு எலிஸாவும், கூடவே ஃபேயும் புறப்பட்டனர். இங்கிலாந்திலிருந்து 
ஐரோப்பா வழியாக ஆல்ஸ் மலை தொடரின் ஊடே  பிரான்ஸ், இத்தாலி
வழியாக ஜெனோவா துறைமுகம்   வந்தடைந்து,மரக்கலம்    மூலம்கெய்ரோ வரை  பயணமாகவும் ,பிறகு செங்கடல் வழியாக பாய்மர  கப்பல்  மூலம் 
கள்ளிக்கோட்டை வந்தடைந்தார். பின்  கோவாவிலிருந்து சென்னை வந்து, 
கல்கத்தா சென்றடைந்தார். இந்த பயணம் சுமார் ஒரு வருடகாலம் நீடித்தது. 
வழிபறி கொள்ளையர்களிடம், எதிர்ப்பாளர்களிடம் மாட்டிக் கொண்டு 
பொருள்களை இழந்து, சிறைப்படுத்தப்பட்டு, பலவித இன்னல்களை 
சந்தித்து கல்கத்தா சென்றடைந்தார். இதில் ஏன் அவர் தரை வழி
பயணத்தை தேர்ந்தெடுத்தார்  என்பதற்கான காரணம் விளங்கவில்லை. 
ஏனெனில் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் கடல்வழி மார்க்கம் 
அதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.
சாகசமும், துன்பங்களும் நிறைந்த  இந்த பயணத்தை எலிஸா 
மேற்கொண்டபோது ஒரு அற்புதமான செயலையும் செய்தார். தொடர்ந்து
தனது தயாருக்கும், சகோதரிக்கும் இவர் தன்னுடைய பயண விபரங்களை,
அழகான, இலக்கிய தரம் வாய்ந்த நடையில் கடிதங்களை எழுதி வந்தார். 
மழையிலும், குளிரிலும், பின் கடும் வெப்பத்திலும், எலிஸா கடிதங்களை
எழுத மறந்ததே இல்லை. அவருடைய 23 கடித தொகுப்புகளை கொண்ட 
நூலே இந்த பயண நூல்.

        250 ஆண்டு காலத்திற்கு முன் தரைவழி, கடல்வழி பயணம் எவ்வாறு
இருந்தது என்று நினைக்கும் போது ஒரு கனம் பிரமிப்பாகவும், அச்சம்
தருவதாகவும் இருந்து இருக்கிறது. இருப்பு பாதை, மோட்டார் வாகனம் 
வருவதற்கு முன்பான காலம்!. குதிரைகள் இழுக்கும் கோச்சு வண்டி பயணம்,
மலைமீது கழுதை சவாரியில் பயணித்தது, என செழுமையான ஐரோப்பிய
பள்ளதாக்குதலிலும், ஆல்ஸ் மலை தொடரை கடந்தும், மழை, கடும்பனிக்கு
நடுவில் பயணம் மேற்கொண்ட இந்த இளம்பெண்ணின் தீர மனத்தை 
நினைத்தால் வியப்பும், வியாகூலமாக நம் மனம் அதிருகிறது. ஐரோப்பா 
நெடுவிலும் பெரிய பிரச்சனைகள் எதுவுமில்லை. அதிக செலவுகளும், 
செலாவணி பிரச்சனைகளும், சமாளிக்கப்பட்டது. எலிஸாவிற்கு சிக்கனம்
கை வந்த கலை. எதையும், எந்த செலவுகளையும் தனது சிக்கன 
மனதினிலேயே பரிசிலிப்பதில் வல்லவர். கெய்ரோவில் நடைப்பெற்று 
கொண்டிருந்த அடிதடி, வழிப்பறி கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய புர்கா 
கலாச்சாரம், வழி எங்கும் தான் சந்தித்த மனிதர்கள், அவர்களை பற்றிய 
விவரணை, அவர்களுடைய  சுபாவங்கள் என அழகாக  எலிஸா பதிவு 
செய்து இருப்பதுதான் இந்நூலை வாசிக்க தூண்டும் நூலாக்குகிறது.

        ஒரு வழியாக செங்கடல் வழியாக கள்ளிக்கோட்டை வந்து சேர்ந்தபோது
இவருக்கு பெரிய ஏமாற்றம். இங்கிலாந்து ஆட்சி நடைபெறும் நினைப்பில்
வந்தவருக்கு பெரும் அடி. அங்கு ஹைதர் அலியின் பட்டாளம்  இவரை 
வரவேற்றது. ஆங்கிலேயனாக இருந்த, கொடுமனம் கொண்ட கொள்ளையன், 
அய்ரேஸ் தலமையில் இவருகளுடைய பாய்மர கப்பல் சூழ்ப்பட்டு கைது
செய்யப்படுகிறார்கள். கள்ளிக்கோட்டையில் இவர்களிடம் இருந்து இன்னும் 
ஏதாவது விலைமதிப்பில்லாத பொருள்களை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறதா
என்று எண்ணி இரண்டு மாதங்களுக்கு மேல் சிறை வைக்கப்பட்டனர்.
தங்களிடமிருந்து  அனைத்து பொருள்களையும் எலிஸா தம்பதினர் இழந்து
இருந்தனர். எலிஸா சில விலை உயர்ந்த சிறிய பொருள்களான கை
கடிகாரங்கள்.கை உறையில் போட்டு தந்திரமாக மறைத்து வைத்து இருந்தார்.
ஆங்கிலேயனாக இருந்தாலும் அய்ரோஸை மோசடி கொள்ளையன் 
இங்கிலாந்து பெண்மணியிடம் சக நாட்டவர் என்ற எந்த
பரிவுமில்லை.அவர்களுடைய கோவாவிற்கு செல்ல வேண்டும், பணம் இழப்பீடு
வேண்டும் என்ற  இவர்களுடைய கோரிக்கை(அங்கிருந்த பல கையூட்டு
பேர் வழிகளால்) யினால் அழைக்களிக்கப்பட்டா ர்கள். கையூட்டிற்கும் இந்தியாவிற்கும்
பல ஆயிரம் ஆண்டுகால பாரம்பரியம் இருக்குமோ?!. கிருத்துவ பாதிரியார் 
ஒருவர் அனுப்பிய எழுநூறு ரூபாயும், ஹைதர் அலி ஆட்சியர் அளித்த 
இழப்பீடு ஐநூறு ரூபாயும், கையூட்டு கொடுப்பதற்கும், சில செலவினங்கள் 
செய்வதற்கும் உதவியாக இருந்தது.

        யூத வணிக ஒருவருடைய நன்மதிப்பை பெற்று 
கள்ளிக்கோட்டையிலிருந்து  கோவா தப்பி சென்று பிறகு, கோவாலிருந்து
சென்னைபட்டினம் வந்தார். சென்னைபட்டினம்  பற்றிய இவருடைய விவரணை 
வியப்பளிக்கக்கூடியதாக இருக்கிறது. அன்றைய சென்னையின் செல்வ 
செழிப்பை அறிய முடிகிறது. அழகிய நகராக உருவாகி கொண்டிருந்த 
சென்னையை விவரிக்கிறார். அடிதட்டு மக்களுடைய வாழ்வையும் பதிவு 
செய்ய மறக்கவில்லை. சில நாட்கள் இருந்த பிறகு தம்பதிகள் கல்கத்தா 
நோக்கி பயணிக்கிறார்கள். கணவரை  பற்றிய  இவருடைய் நம்பிக்கைகளும், 
சரிவை சந்தித்து கொண்டு  இருப்பதையும் அறியமுடிகிறது. முன்கோபமும், 
விவேகமற்ற அவருடைய  அணுகுமுறையும், எலிஸாவிற்கு கலக்கத்தை 
ஏற்படுத்தி இருக்கிறது. பல தடைகளை கடந்து, செல்வம் சேர்க்க
வேண்டுமென்று இந்திய பயணத்தை  மேற்கொண்ட இவருக்கு, கணவரின் 
நிலை தொடர்ச்சியாக கவலையூட்டுவதாக  இருந்தது. பல இடங்களில்
மிஸ்டர்  ஃபேயின் குணத்திற்கு கடிவாளம் போட்டு  எலிஸாவால்
மட்டுமே நிலமையை கட்டுப்படுத்த முடிந்தது. ஒரு வழியாக
கல்கத்தாவை அடைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மிஸ்டர்  
ஃபே  பதிவு செய்து கொண்டார்.

        கல்கத்தா வாழ்க்கை எப்படி இருந்து இருந்திருக்கிறது? ஐரோப்பியருடைய 
ஆடம்பர வாழ்க்கை, பணிவாக இருப்பது போல இருந்து ஊதாரியான 
அவர்களுக்கே வட்டி பணம் கொடுக்கும் வேலைகாரர்கள், வெள்ளையர்கள் 
ஒருபுரம் இந்தியாவை சுரண்டி கொண்டிருக்கும்போது அவர்களுக்கு வட்டிக்கு 
பணம் வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை ஓட்டாண்டி ஆக்கும் 
இந்திய தந்திரகார பணியா வணிகர்கள்  பற்றியும், மெலிந்த தேகத்தடனும்
பல  விஷயங்களில் உறுதியற்ற போக்கையும் மத  ரீதியான மன 
உறுதியையும், இந்தியர்களின் குணநலன்களாக குறிப்பிடுகிறார்.

        உடன்கட்டை ஏறும் சதிபழக்கத்தையும், பூரி ஜகநாதர் ஆலயத்தில் 
தேரோட்டத்தின் போது சக்கரத்தில் பாய்ந்து, உயிரை போக்கி கொண்டால்
மோட்சத்திற்கு போகலாம் என்ற நம்பிக்கையை பார்த்து, துயரத்துடன் பதிவு 
செய்கிறார். கணவர்  ஃபேயுடான உறவு, பெரும் கடனாளி ஆக்கி விட்ட
நிலையில் வெறும் கையுடன், ஃபேயிடமிருந்து விவாகரத்து பெறுகிறார். சில
நல்ல  உள்ளம் கொண்ட ஐரோப்பிய குடும்பங்களுடைய ஆதரவில் சில
மாதங்கள் இருந்து விட்டு இங்கிலாந்து திரும்புகிறார். இந்திய கல்கத்தா சூழல்
பிடித்துவிட்டதால் என்னவோ அதற்கு பின்பும் இந்தியா வந்து, அழகிய
தொப்பிகள் விற்கும் கடை வைத்து வாணிபம் செய்கிறார்.கல்வி நிலையம்
நடத்துகிறார். இங்கிலாந்திற்கு இரண்டு முறை போய் வருகிறார். செல்வத்தைத் 
தேடுவதில்  எலிஸா பெரிய அதிர்ஷ்டக்காரியாக இல்லையென்றாலும்
அவருடைய் போராட்ட குணம் இறுதிவரை குறையவில்லை. தனது 
அறுபதாவது வயதில் கல்கத்தாவில் மரணமடைகிறார். எலிஸாஃபேயின் 
இளமையில் புறப்பட்ட இந்த சாகச பயணம் இறுதி வரை அவரை
துணிச்சல்கராகவே ஆக்கியது. இன்றைய சூழலில் கூட இளம்பெண்கள் பயணம்
மேற்கொள்வது எவ்வளவு ஆபத்தாக(நம் தேசத்தில்)இருக்கிறது என்று
நினைக்கும் போது, எலிஸாவை, அவருடைய இலக்கிய தரமான கடிதங்களை 
அவருடைய வாழ்வை, மன உறுதியும் இந்நூல் வாசிப்பிற்கு பின்பு நம் 
மனதில் நெடுங்காலம் வெளிச்சமாக இருக்கும் என்பது திண்ணம்.