Wednesday, April 06, 2011

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்

சேலம் மாவட்ட தமுஎகச 6.4.11 அன்று நடத்திய

'எரியும் வயிறுகளும் எரியாத அடுப்புகளும்' கவியரங்கத்தில்

வாசிக்கப்பட்ட எனது கவிதை.

(உரைநடைக் கவிதை ..!)

*************************************************


ராசாத்திக்கு எப்போதும் வருவது போல்

அதே கனவு இன்றும் வந்து போனது நினைவுக்கு வந்தது

ஓட்டுக் கேட்டு செல்லும்

ஆட்டோவைப் பார்த்ததும் ,


கிடைக்காமல் போன ரேசன் கார்டும்,

வாக்காளர் அட்டையும்,

இலவச தொலைக்காட்சியும்,

உதவிப் பணங்களும் .அவள்

கனவிலும், நித்தமும் கன்னாமூச்சியாடின .


வாடகைக் குடிசையில்

வாழ்க்கை நடத்துவதால்,

ரேசன் கார்டு கேட்டு எத்தனை மனுக் கொடுத்தாலும்,

புதிது புதுதாய் எதையாவது கேட்டு ,

அலைக்கலிக்கும் அதிகாரிகளிடம்,

சொந்த நாட்டில் அகதியான

அவளால் ,எத்தனை வருடம் போராடினாலும்,

இதுவரை நிரூபித்து எதையும் வாங்க முடியவில்லை .


எந்த ஆதாரத்தைக் கேட்க்கிறார்கள்?

ஆயிரத்து ஐநூறு சம்பளத்தில் ,

வீட்டுவேலைக்கு போய்வரும் அவளுக்கு,

இதுவரை எதுவும் சொந்தமாக

இருந்ததில்லை ,

தன பிள்ளைகைத் தவிர ..


தினமும் குடித்து விட்டு வந்து

சண்டை போட்டு ,அவளை அரை உசிராக்கி விட்டு ,

எப்போதோ ஓடிப்போன கணவனுடனான வாழ்வைப்போல ,

துரதிஷ்டம் தொடர்ந்தே வருகிறது ,இதிலும் அவளுக்கு,


பாதியிலே படிப்புக்கு

முழுக்குப் போட்டு ,

வேலைக்குப் போய்

பணம் தரும் 16வயது மகனையும் ,

தேடிப்பிடுத்து ஒற்றை ரூபாய்

ரேசன் அரிசியை எத்தனை ரூபாய்க்கு

வாங்கிசமைத்தாலும், விழுங்க முயாமல் அழுது ,

முப்பது ரூபாய் அரிசிச்

சோறு கேட்கும்

சின்ன மகளும் தான், இன்று

அவளுக்கு சொந்தமும் ,சொத்தும்,


மளிகைக் கடை அரிசிச் சோறும்,

பாதி நாள் எரியாத அடுப்பும்,

என்றும் பசியால், நிறையாதிருக்கும்

மூன்று வயிறுகளும்,

விட்டுப் போன கணவனின் துன்ப

நினைவுகளின் தொடர்ச்சி போல்

கூடவே வந்து கொண்டிருக்கின்றன ,

நிரந்தர துணையாக ,அவளுக்கு..