Tuesday, July 05, 2005

சிறுகதை-சபியாம்மாள் தோட்ட வீடு.


சபியாம்மாள் தோட்ட வீடு.
*********************
இப்பொழுதெல்லாம் சொந்த ஊருக்குப் போவதென்பது தூரமாக இருப்பதனால் எப்பொழுதாவது மட்டுமென்றாகிவிட்டது அவனுக்கு. இந்த முறை அண்ணன் மகள் திருமணத்திற்கு போய் இரண்டு நாள் தங்கவேண்டிவந்தபோது, சொந்தக்காரர்களை, தெரிந்தவர்களை வழக்கம்போல் ஒரு நடை பார்த்துவிட்டு சபியாம்மாள் வீட்டைக்கடக்கும் போது கால்கள் அனிச்சையாக வீட்டிற்கு முன்பு நின்றன. வீட்டிற்குவெளியே பெண்கள் சுயதொழில் குழு ஒன்றின் பெயர்ப்பலகை தொங்கியது. உள்ளே ஒன்றிரண்டுபெண்கள் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருத்தி அவனை அடையாளம் கண்டுகொண்டு வாங்கண்ணே என்றாள். அவனும் அவளை அடையாளம் தெரிந்து கொண்டு புன்னகைத்தான். அவன் கூடப்படித்த கலைச்செல்வியின் தங்கை மலர்க்கொடி அவள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கொல்லைப்புறத்து தோட்டம் எப்படி இருக்கிறது என்று கேட்டபோது ,அவனை கொல்லைப் புறம் நோக்கி அழைத்துச்சென்றாள்.



கனகாம்பரப்பூவும், மல்லிகைச் செடிகளும் சபியாம்மாள் பெயர் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தன.கொழுஞ்சி மரமும் காய்கள் விட்டிருந்தது. கருவேப்பிலை மரம் அடர்ந்திருந்தது. முருங்கைமரம் நன்கு வளர்ந்து பெரிய மரமாக நின்றிருந்தது. முருங்கை பிஞ்சுகள் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன.மனம் விசாலமாகியது போல் உணர்ந்தான்.மலர்க்கொடி அவன் எண்ணங்கள் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அமைதியாக அவனை தனியே விட்டு விட்டு வீட்டினுள் திரும்பிப்போயிருந்தாள்.


உள்ளே திரும்பி வந்தான். ஹாலில் பெரியம்மாள் கட்டிலில் உட்கார்ந்திருந்த பகுதியில் இப்போது மேஜைகளும் அதன் மீது நிறைய பெட்டிகளும் அடுக்கப்பட்டிருந்தன. அங்கு பெரியம்மாள் உட்கார்ந்திருந்தவாறு அவனைக் கண்டவுடன் நிமிர்ந்து புன்னகைப்பதாய் ஒரு கணம் பிரமை ஏற்பட்டு மறைந்தது. திடீரென்று அவரில்லை என்ற வெறுமையும் சூழ்ந்து கொண்டது. மலர்க்கொடியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்.


அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அந்த நிகழ்ச்சி நடந்தது.சபியாம்மாள் வீட்டினுள்ளும், வெளியேயும் பெருங்கூட்டம் கூடியிருந்தது. ஜனங்கள் வருவதும் பார்ப்பதும் செல்வதுமாக இருந்தனர். எல்லோர் முகத்திலும் பயம் கலந்த வியப்பு. சபியாம்மாள் வீட்டிற்கும் பக்கத்துவீட்டு ரஷ“துபாய் வீட்டிற்கும் இடையே பத்தடிக்கு பக்கம் இருந்த மதில் சுவரையையும் தாண்டி அங்கிருந்து வீசப்பட்டிருந்த பல பாத்திரங்களும் பொருள்களும் நசுங்கி சபியாம்மாள் வீட்டு முற்றத்தில் இறைந்து கிடந்தன. பக்கத்துவீட்டு ரஷ“துபாய் நல்ல தொழுகையாளி மனிதர்,திருச்சியில் வியாபாரம், குடும்பம் இங்கிருந்தது. அவர்கள் வீட்டிற்கு வேண்டாதவர்கள் யாரோஜின்(பூதப்பேய்)னை ஏவி விட்டிருக்கிறார்களாம், அதனுடைய வேலைதானாம் அவர்கள் வீட்டுப் பொருட்களைத் து‘க்கி பக்கத்து வீட்டில் எறிந்து கொண்டிருப்பது. பொருட்காட்சியைப் பார்ப்பதுபோல ஊர் ஜனங்கள், பள்ளிமாணவர்கள் என சபியாம்மாள் வீட்டு சந்து வழியாக முற்றத்தை ஒட்டி வருவதும் போவதுமாக பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.


மூன்றாம்நாள் அவனும் அந்தக் கூட்டத்தோடு உரசிக்கொண்டு உள்ளே போய் முற்றத்தை ஒட்டி நின்று கொண்டே பார்த்தான். பெரிய முற்றம் நிறைய சின்னச் சின்ன தட்டு, வாளி, பாத்திரங்கள், உலக்கை, விளக்குமாறு என்று பல்வேறு பொருட்கள் இறைந்து கிடந்தன. வீட்டினுடைய பக்கத்து வீட்டு ஓரம் உள்ள ஓடுகள் பல உடைந்து கிடந்தன அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே திடுக்கிடும்படி ஒரு பெரிய பாத்திரம் அவனுக்கு இரண்டடி து‘ரத்தில் வந்து விழுந்தது.


சில விஷயங்களுக்கு வாழ்வில் விடை கிடைப்பதில்லை. அதுபோன்ற நிகழ்வாகவேஇப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு அது தோன்றுகிறது. அவனுக்குத்தெரிந்த ஒரு சில விவரமானவர்கள் அது ஏதோ மனப்பாதிப்பு ஏற்பட்டவர்களால் செய்யப்பட்ட செயலாக இருக்கும் என்றார்கள். இருப்பினும் ரஷ“துபாய் வீட்டில் அப்போது யாரும் அவனுக்குத் தெரிந்து பாதிப்புக்குள்ளானவர் இல்லை.


இவ்வளவு நடந்தும் சபியாம்மாள் கலங்காதிருந்தார். அவர்கள் வீட்டிற்காவதுஅல்லது சற்றுத் தள்ளியிருக்கும் அத்தை வீட்டிற்கோ போய்விடுவது நல்லது பெரியம்மமா என்றுஅவ்ன் சொன்ன போது, "இதற்கெல்லாம் நான்பயப்பட்டுவிடமாட்டேன் அப்துல்லா" என்று அசைந்து கொடுக்காமல் அங்கேயே பிள்ளைகள் மூவரையும் வைத்துக் கொண்டிருந்தார்.
இந்த மாய மந்திரவேலை ஒரு வாரத்தில் எப்படியோ நின்றுவிட்டது. ரஷ“துபாய் பெரிய ஹஜரத் ஒருவரைக் கூட்டிவந்து எப்படியோ இந்த சாத்தானுடைய செயல்களை கட்டுப்படுத்திவிட்டார்என்று பேசிக் கொண்டார்கள்.


பின்னர் ஒரு நாள் பல வருடம் கழித்து சபியாம்மாள் இந்நிகழ்ச்சியைப்பற்றிபழைய வீட்டை இடித்து புதுவீட்டைக் கட்ட இருக்கும் நேரத்தில் ஓடுகள் நிறைய உடைந்ததும்பாதிவேலை மிச்சம்தான்என வழக்கமான சிரிப்புடன் வேடிக்கையாகச் சொன்னார்.துயரங்களையும் வென்றெடுக்கும் அற்புத வரத்தை , சிரிப்பை, ஆடைபோல் எப்போதும் அணிந்திருந்தார் சபியாம்மாள்.


சபியாம்மாளை அவனது பெரியப்பா திருமணம் செய்து கொண்டபோது முப்பத்திமூன்று வயதைக் கடந்திருந்தார். ஏற்கனவே திருமணமாக ஒரு சில வருடங்களிலேயேமுதல் மனைவி இறந்து போய் பலவருடங்கள் திருமணம் செய்யாமலிருந்தார். குழந்தையும்இல்லை. அவன் பெரியப்பா நல்லசிவப்பு. ஆனால் தாத்தாவிற்கு சொந்தமானதால்தாத்தாவுடைய பூர்வீக கிராமத்தைச் சேர்ந்த சபியாம்மாளை திருமணம் செய்துவைத்திருந்தனர். சபியாம்மாள் நல்ல கருப்புநிறம். சற்று முன்பக்கம் நீட்டிய முன்பல்லுடன்,நல்ல கிராமத்து மனுஷ’க்குரிய கலகலப்பான வெள்ளந்தியான சிரித்த முகம் அவருக்கு.


சபியாம்மாளுடைய மூத்த மகனான அவனது ஒன்று விட்ட தம்பிக்கு அவனைவிடஒரு வயது குறைவு. அடுத்ததாக இரண்டு வருடம் கழித்து பெண் குழந்தை. மலேசியாவியாபாரத்தில் அவனது தந்தையும், பெரியப்பாவும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்துவந்தார்கள். திடீரென்று இரத்த அழுத்த நோய் வாய்ப்பட்டு பெரியப்பா சொந்த ஊரிலேயேஏதாவது தொழில் செய்து கொள்ளலாம் என்று நாற்பத்துமூன்று வயதிலேயே ஊர் திரும்பிவிட்டார். ஆனால் ஊர்திரும்பி ஒரு வருட காலத்திலேயே மஞ்சள்காமாலை நோயும் ,பக்கவாத நோயும் சேர்ந்து கொண்டது. ஒரு சில மாதங்கள் படுத்த படுக்கையாய் இருந்து திடீரென்று இறந்த போது, மூன்றாவது மகன் சபியாம்மாள் வயிற்றில் ஐந்து மாதம். பெரியப்பா இறந்து ஐந்து மாதம் கழித்துத்தான் அவன் பிறந்தான்.

பெரியப்பா ஊருக்கு வந்து பூர்வீக சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்ட போது அதுவரை ஒற்றுமையாக இருந்த அவன் அப்பாவுக்கும் அவருக்கும் கொஞ்சம் மனத்தாங்கலும் ஏற்பட்டிருந்தது. பெரியப்பா இறந்த போது சபியாம்மாள் கைவசம் இருந்தது, பூர்வீக பழைய வீடும், பெரியப்பா சம்பாதித்து வாங்கிப்போட்டிருந்த ஒரு சிறிய வீட்டின் வாடகையும், அவர்கள் உறவினர் ஒருவருடைய வியாபாரத்தில் சேர்ந்திருந்த பங்குத் தொகையினால் மாதமாதம் வந்த சிறு வருமானமும், கிராமத்தில் இருந்த ஒரு சில ஏக்கர் நிலமும் தான்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு பிரதான தொழிலாக மலேசியாபோய் வேலை பார்ப்பது என்பது ஊரில் நெடுங்காலமாகஇருந்து வந்தது. சபியாம்மாள் அப்பா மனைவியையும், மகளையும் கைவிட்டு விட்டு மலேசியா போய் வந்து கொண்டிருந்தவர். அங்கேயே தொடுப்பு வைத்துக் கொண்டு தங்கிவிட்டார். சொந்தபந்தத்தின் அனுசரையினாலே சபியாம்மாள் வளர்ந்தவர். அதிகம் படிக்கவில்லை, கிராமத்து மனிதர்களோடு பழகியவராதலால் இங்கும் அவரைச் சுற்றி எப்போதும் விவசாய வேலை செய்பவர்களும். சாதாரண மனுஷங்களுக்கும் சாதி, மத பேதங்களையும் மீறி பழக சகஜமான மனுஷ’யாக இருந்தார். எப்போதும் யாராவது வந்து ஏதாவது வியாபாரம், கதை பேசிக் கொண்டேயிருப்பார்கள். தனி மனுஷ’யாக மூன்று குழந்தைகளை பராமரித்து வந்தவருக்குத் துணையும் அவர்கள் தான்.


வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கனகாம்பர பாத்திகள், மல்லிகைச் செடிகள் கருவேப்பிலை மரம், முருங்கை மரம் அவன்று ஒருதோட்டமே சபியாம்மாளால் உருவாக்கப்பட்டு நீருற்றி பராமரிக்கப்பட்டு வந்தது.கொழுஞ்சி பழுத்திருக்கும் போது பறித்துத் தின்றால் சாத்துக்குடியைப் போல் தித்திக்கும், காயில் ஊறுகாய் போடலாம்.மல்லிகைச் செடியின் மணம் கமகமக்கும்,கனகாம்பரம் இதழ் விரித்து சிரிக்கும் அற்புத நந்தவனம் அங்கிருந்தது.அவனுக்குத்தெரிந்து யார் வீட்டிலும் இவ்வளவு வகையான தோட்டம் இல்லையெனலாம். வீட்டின் முன்புறம் இருந்த மாட்டுக்கொட்டகையில் இரண்டு பால் மாடுகளும்,அவர்களோடு விளையாடும் ஆட்டுக்குட்டிகளும் இருந்தன. குடும்பத்தின் சின்னச் சின்ன செலவுகளுக்கு தோட்டம் போதுமானதாக இருந்தது. பெரிய செலவுகளுக்கு பெரியப்பா பங்கு சேர்ந்திருந்த கடையிலிருந்து வந்த பணத்தில் கவனித்துக் கொண்டார். தாய்ப்பறவைக்கு உள்ள பொறுப்புணர்வு பூண்டு தன் சிறகுகளால் அரவணைத்து அவர் குழந்தைகளை வளர்த்தது, அதுவும் வெளியில் அதிகம் போக முடியாத இஸ்லாமிய பெண்மணியாக என்பது, யோசித்தால் அவனுக்கு இப்போதும் பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது.


அவனுக்கும் சபியாம்மாளுக்குமான பாசப்பிணைப்பு வித்தியாசமானது. அவன்அவர்கள் பாட்டியைப் போல கருப்பு, அதே சமயம் அவனுடைய தாத்தா சிவப்பாதலால் கருப்பும் சிவப்பும் அவர்கள் குடும்பத்தில் கலந்தே வந்து கொண்டிருக்கிறது.சபியாம்மாளுடைய மகன் சிவப்பு, அடுத்த மகளும் சிவப்பு. ஆனால் அவனும் அவனது தங்கையும் கருப்பு. அவர்கள் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்த போது வரக்கூடிய எவருமே அவனை சபியாம்மாளுடைய மகன் தான் என்று முதலில் நினைப்பார்கள். அவன் அம்மாவும் வேடிக்கையாக ஆம் என்று சொல்லிவைப்பார். எனவே இரண்டு பேரையுமே அம்மாவாக ஏற்றுக் கொண்டுவிட்டதனால் சபியாம்மாள் மீது அவனுக்கு ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டிருந்தது,அவருக்கும் அப்படியே.



அவனுடைய பள்ளி விடுமுறை நாட்களில் பல நாட்கள் கழிந்தது சபியாம்மாள்வீட்டினுள்தான். அம்மாவிடம் சேட்டைகள் செய்து சிற்சில சமயங்களில் ஓடிவந்து இருக்கும்புகலிடமாகவும் சபியாம்மாள் வீடு அவனுக்க்கிருந்தது.
அவர்கள் வளர்ந்தபோது,தான் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை கொண்டும்,இருந்தஇன்னொறு சிறிய வீட்டை விற்றும், அவர்கள் பூர்வீக நிலத்தினை விற்றும், மகள் திருமணத்தைமுடித்து வைத்து, பழைய வீட்டை சபியாம்மாள் இடித்து புதிதாக கட்டினார், மகனுக்கு திருமணம் செய்து வைத்து தனது மருமகனுடன் வியாபாரத்தில் சேர்த்துவிட்டு, சின்ன மகனை வெளி நாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தது, என அனைத்தும் சபியாம்மாளுடைய சாமர்த்தியத்தினால் மட்டுமே சாத்தியமாகியது.
கல்லும் கதவுமாக, உரமான கிராமத்து மனுஷ’யாக இருந்த சபியாம்மாளுக்கும்ஊடே வந்து சேர்ந்த சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் இன்னமும் நீண்ட காலம்வாழ்ந்திருக்க வேண்டிய அவரை இவ்வளவு žக்கிரம் கொண்டு போகுமென்று யாரும்எதிர்பார்க்கவில்லை. குளியலறையில் தடுக்கி விழுந்து கையெழும்பு முறிந்த போது அந்தவேதனையும், திடீரென்று வந்த மாரடைப்பும் சேர்ந்து காலனாகி அவரது உயிரைக் கவர்ந்துசென்றதும் சபியாம்மாள் இல்லாத வெறுமை வெகுவாக அவனையும், குடும்பத்தினரையும்பலகாலம் பாதித்தென்னவோ உண்மை.

காலம் மனிதர்களை எங்கெங்கோ சிதறடித்து விடுகிறது. அவனும் சொந்தஊரிலிருந்து தொழில் நிமித்தமாக பலகாதம் தள்ளி வந்த போதும் உள்ளுக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த நினைவுகளை சபியாம்மாள் வீடு அவனுள் மீட்டெடுத்தது.
சபியாம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்தான் , கால்கள் திரும்பினாலும், நினைவுகள்இன்னமும் மீழவில்லை.மனத்தினுள் சபியாம்மாள் விதைத்துச் சென்றவையும் அவர் நினைவுகளும் அந்த தோட்டத்தைப் போன்றே பசுமையாக இருப்பதை உணர்ந்தான்.
** ** **

கவிஞனுக்கு..
*********

நண்பா வின்னில் பறந்த
உன் கற்பனைக் குதிரைக்கு
கொஞ்சம் ஓய்வு கொடு..!

தரையில் கொஞ்சம் நடந்து
எதார்த்தத்தில் சற்று இறங்கு...


Posted by Picasa